Published : 07 Jun 2024 12:48 PM
Last Updated : 07 Jun 2024 12:48 PM

இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார்

இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி.ஜான்சிங் காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூன் 7) அதிகாலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ஜான்சிங் இந்திய காடுகள் அனைத்தையும் அறிந்தவர். அவற்றில் பெரும்பாலானவற்றை நடந்தே கடந்தவர். உடல் நலம் குன்றுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு கூட வட இவர் இந்தியக் காடுகளில் ஆய்வுக்காகப் பல கிலோமீட்டர் நடந்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.

இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் முதன்மையராக ( Dean, Wildlife Institute of India) பல ஆண்டுகள் பணியாற்றியவர். அவரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திய வனப்பணி அலுவலர்கள் (IFS officers) நாடு முழுவதும் பணியாற்றுகிறார்கள்.

இந்தியக் காடுகள் பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் அவர் எழுதியுள்ள நூல்கள் அரிய ஆவணங்கள். அவரது ஆழமான படிப்பறிவும் இடைவிடாத கள ஆய்வும் இந்தியக் காட்டுயிர் மேலாண்மைக்குப் பெரும்பங்காற்றியுள்ளது.

இந்நிலையில், அவரது மறைவுக்கு சூழலியல் ஆர்வலர்கள் பலரும் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “வனவிலங்குப் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் என்ற ஒரு முன்னணி உயிரியலாளரைத் தமிழ்நாடு இழந்துள்ளது. அவரது பணிவு, இரக்கம் மற்றும் அறிவியல் அடிப்படையிலான கானுயிர்ப் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து நம்மை வழிநடத்தும். அவருக்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x