Published : 07 Jun 2024 05:18 AM
Last Updated : 07 Jun 2024 05:18 AM

தமிழகத்தில் ஜூலையில் மின் கட்டணம் உயர வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை கையாளும் மின்வாரியம், மின் உற்பத்தி - பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மின் தொடரமைப்பு கழகம் (டான்டிரான்ஸ்கோ) உள்ளிட்ட நிறுவனங்களின் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின்வாரியம் உள்ளது. இதன் காரணமாக, கடந்த 2022-ல் மின்கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது.

2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 6 சதவீதம்அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மின் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனினும், மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டிருப்பதால் 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x