Published : 06 Jun 2024 09:38 PM
Last Updated : 06 Jun 2024 09:38 PM

தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச் சாவடிகளா? - ஆர்டிஐ தகவலில் அதிர்ச்சி

மதுரை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க உள்ளதாக வெளியான ஆர்டிஐ தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் அதிகபடியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மதுரை, சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.

அந்த சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி போராடங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரையில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒத்தக்கடை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாகன ஓட்டிகள் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி மனு கொடுத்தனர்.

மு.க.ஸ்டாலினும், அந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், கப்பலூர் டோல்கேட்டை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருந்தார். ஆனால், தற்போது வரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அடிக்கடி திருமங்கலம், கப்பலூர் பகுதியில் வாகன ஒட்டிகளுக்கும், கப்பலூர் டோல்கேட் ஊழியர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. கிராம மக்கள், வாகன ஒட்டிகள் சேர்ந்து கடை அடைப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல், மாநிலம் முழுவதும் பல்வேறு சுங்ச்சாவடிகள் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தொடர்ந்த குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 10 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக ஆர்டிஐ-யில் வெளியான தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை சேர்ந்த மருதுபாண்டி என்பவர், இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு ஆர்டிஐ- மூலம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து மனு செய்திருந்தார். அந்த கேள்விகளுக்கு வந்த பதில்கள் வருமாறு: “நாடு முழுவதும் 26 மண்டலங்களின் கீழ் சுமார் 805 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மதுரை மண்டலத்தின் கீழ் 28 சுங்கச்சாவடிகளும், சென்னை மண்டலத்தின் கீழ் 31 என மொத்தம் 59 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மதுரை மண்டலத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் 10 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே 59 சுங்கச்சாவடிகள் செயல்படும் நிலையில் தற்போது கூடுதலாக 10 சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்படபடள்ளது.

மதுரை மாவட்டத்தில் மதுரை மேலூர் முதல் காரைகக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல், வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த 2 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x