Published : 06 Jun 2024 03:38 PM
Last Updated : 06 Jun 2024 03:38 PM

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சவுக்கு சங்கர் | கோப்புப்படம்

சென்னை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பி.பி.பாலாஜி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதால் நீதிபதி பி.பி.பாலாஜியின் உத்தரவை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோ, என ஊகிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கே மாற்ற வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படி பிறப்பிக்கப்படவில்லை என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில் கூறியுள்ளதால், இந்த வழக்கை முடிவு செய்ய காவல்துறை ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டியது அவசியமானது.

மேலும், இந்த வழக்கில் அரசு பதில்மனு தாக்கல் செய்து போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என கருதுகிறேன். இன்று பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன். அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம். தனிநபர்களின் சுதந்திரம் மிக முக்கியமானது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என முடிவு செய்தால், அதற்குரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தால் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படும்,” என்றார்.

அப்போது சவுக்கு சங்கர் தாயார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு அனுப்பினால் அது நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கும் செயல்” என்றார்.

அப்போது இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், “தன்னை இருவர் சந்தித்து அழுத்தம் கொடுத்ததால் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்ததாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுவதும் தவறானது” என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இன்றைக்குள் (ஜூன் 6) இந்த வழக்கில், சென்னைப் பெருநகர காவல் ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x