Published : 06 Jun 2024 03:01 PM
Last Updated : 06 Jun 2024 03:01 PM

“பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு அண்ணாமலைதான் காரணம்” - எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி | கோப்புப்படம்

கோவை: “அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் அதிகமாக பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால், அதிகமாக பேசியதே, அவர்தான். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக குறித்த அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்து நேற்று கொஞ்சம் அதிகமாகவே பேசியிருக்கிறார். அப்படியெல்லாம் பேசக்கூடாது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். மேலும், அண்ணாமலை அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் அதிகமாக பேசியதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆனால், அதிகமாக பேசியதே, அண்ணாமலைதான். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் . அதே கூட்டணி நீடித்திருந்தால், இன்று 30-35 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால், அதெல்லாம் செய்துவிட்டு இன்று மீண்டும் வந்து அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதிமுகவுக்கு எதிரான தவறான பிரச்சாரங்களைத் தாண்டி, கடந்த தேர்தலைவிட, இந்த முறை அதிகமாகவே வாக்குகளைப் பெற்றுள்ளோம்.

கோவையில், ஏற்கெனவே பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை விட, அண்ணாமலை குறைவான வாக்குகளைத் தான் வாங்கியிருக்கிறார். நான் எங்களது கட்சி குறித்து என்ன வேண்டும் என்றாலும் பேசுவேன். அதேநேரம் அண்ணாமலை குறித்து நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதிலளித்திருக்கிறேன். எனவே, அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. கண்டிப்பாக, 2026-ல் அதிமுக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x