Last Updated : 06 Jun, 2024 11:31 AM

1  

Published : 06 Jun 2024 11:31 AM
Last Updated : 06 Jun 2024 11:31 AM

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் - நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்; சிபிசிஐடி முடிவு

சென்னை: ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்ரல் 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற இந்த சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் பிடிபட்டது. நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. முதலில் தாம்பரம் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

முதல்கட்டமாக, ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழக பாஜக வர்த்தக பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

கோவையில் உள்ள தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் வீட்டுக்குச் சென்று, சிபிசிஐடி போலீஸார் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேரும் கடந்த 31-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவு வெளியான பின்னர் ஆஜராவதாக அவர்கள் தகவல் அனுப்பினர்.

இந்நிலையில, சிபிசிஐடி சம்மனை ஏற்று கேசவ விநாயகன், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரானார். ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அவரிடம் துணை காவல் கண்காணிப்பாளர் சசிதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை செய்தனர். அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முழுவதும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து கேசவ விநாயகன் வெளியே வந்தார்.

இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராகாத நயினார் நாகேந்திரன் உட்பட 3 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x