Published : 05 Jun 2024 04:05 PM
Last Updated : 05 Jun 2024 04:05 PM

வேட்பாளர் பட்டியல், சின்னம் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் குறித்த பட்டியல், சின்னம் போன்ற விவரங்களை பத்திரிகைகளில் விரிவான விளம்பரமாக வெளியிடக் கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பொன்குமரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படவில்லை. வேட்பாளர்கள் சமமாக நடத்தப்படவில்லை. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளனர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 38-வது பிரிவின்படி, வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் முடிவுக்கு வந்தபிறகு, சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி, தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர், முகவரி, சின்னம் உள்ளிட்ட விவரங்களை பட்டியலிட்டு, பத்திரிகைகளில் விரிவான விளம்பரம் வெளியிட வேண்டும்.

இந்த விதிமுறைகள் எதையும் தேர்தல் அதிகாரிகள் பின்பற்றவில்லை.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இல்லை எனக்கூறி அவர்களுக்கான வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு எப்படி செல்லுபடியாகும்?” எனக் கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர் தரப்பில், ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார் மனுக்களை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், “இது தொடர்பாக மனுதாரர் அளித்துள்ள மனுக்களை தேர்தல் ஆணையம் 4 வார காலத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x