Last Updated : 05 Jun, 2024 12:28 PM

1  

Published : 05 Jun 2024 12:28 PM
Last Updated : 05 Jun 2024 12:28 PM

அதிமுக ‘கோட்டை’ மேற்கு மண்டல மாவட்டங்களில் 2-வது முறையாக வாகை சூடிய திமுக!

கோவை: அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம் உள்ளிட்ட முக்கிய மக்களவைத் தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது. தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.

கொங்கு மண்டலத்தைப் பொருத்தவரை, எம்ஜிஆர் ஆட்சி காலம் முதல் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக ஆதரவு நிலைப்பாடே காணப்பட்டது. இதனால் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டைஎன அக்கட்சியினர் கூறிவருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் மேற்கு மண்டலத்தில் மட்டும் 44 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து,2019 மக்களவைத் தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வென்றது. அதிமுக ஓர் இடத்தில் மட்டுமே வென்றது.

2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி பலத்துடன் மேற்கு மண்டலத்தில் வெல்லும் முனைப்பில் திமுக தீவிரம் காட்டியது. அதன்பலனாக, மேற்கு மண்டலத்தில் அனைத்து இடங்களும் திமுக வசமாகி உள்ளது.

கடந்த 2019, 2024 என அடுத்தடுத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுககோவை, நீலகிரி தொகுதிகளில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஓய்வு பெற்ற பேராசிரியரும், அரசியல் ஆய்வாளருமான பிச்சாண்டி கூறும்போது, “கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுக வாகை சூடியது. ஆனால், அடுத்துவந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியான திமுக வெற்றி பெற்றது. தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு மண்டலம் முழுவதும் திமுக 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய பலமான கூட்டணியை தக்க வைத்து திமுக தேர்தல் களத்தில் மோதியது. திமுகவின் வெற்றிக்கு அதன் கூட்டணி தான் பலம். கூட்டணியை தக்க வைத்து மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். மக்கள் அதிருப்தி இல்லாமல் ஆட்சி நடத்த வேண்டும்.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தொழில் துறை மற்றும் விசைத்தறி தொழில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டிய இடத்தில் திமுக உள்ளது. இல்லையெனில் அடுத்து வரும் தேர்தல் களம் அதிமுகவுக்கு சாதகமாக மாறும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x