Last Updated : 04 Jun, 2024 07:22 PM

 

Published : 04 Jun 2024 07:22 PM
Last Updated : 04 Jun 2024 07:22 PM

தாம்பரம் - மங்களூரு குளிர்சாதன வசதி கொண்ட புதிய ரயில் ஜூன் 7 முதல் இயக்கம்

சேலம்: சேலம், ஈரோடு வழியாக, தாம்பரம் - மங்களூரு இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய வாரம் இரு முறை இயங்கக் கூடிய சிறப்பு ரயில், இரு மார்க்கத்திலும் ஜூன் 7-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

கோடை விடுமுறை முடிவுற்று, பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரயில்களில் நெரிசலை குறைத்திட, சேலம், ஈரோடு வழியாக, தாம்பரம் - மங்களூரு இடையே 14 பெட்டிகளுடன் கூடிய குளிர் சாதன வசதி கொண்ட வாரம் இருமுறை சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் 7ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இதன்படி, தாம்பரம் - மங்களூரு சிறப்பு ரயிலானது (எண்.06047), வரும் 7-ம் தேதி முதல் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 1.55 மணிக்குப் புறப்பட்டு, சேலம் இரவு 7.47 மணி, ஈரோடு இரவு 8.45 மணி, திருப்பூர் இரவு 9.33 மணி, போத்தனூர் இரவு 10.38 மணி என வந்தடைந்து, மங்களூரு ரயில் நிலையத்தை மறுநாள் காலை 6.55 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயிலானது, வரும் 30-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில், மங்களூரு - தாம்பரம் சிறப்பு ரயிலானது (எண்.06048), வரும் 8-ம் தேதி முதல் வாரந்தோறும் சனி மற்றும் திங்கட்கிழமைகளில் மங்களூருவில் மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு, போத்தனூர் மாலை 6.58 மணி, திருப்பூர் இரவு 7.43 மணி, ஈரோடு இரவு 9.05 மணி, சேலம் இரவு 10.07 மணி என வந்தடைந்து, தாம்பரம் ரயில் நிலையத்தை மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயிலானது, வரும் ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஒட்டப்பாலம், சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x