Published : 03 Jun 2024 05:44 PM
Last Updated : 03 Jun 2024 05:44 PM
சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: ‘தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 39 மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 58 பொது பார்வையாளர்கள் வந்து விட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு சுற்றின் விவரமும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டறை உள்ளது. கட்டுப்பாட்டறையில், 12 டிஆர்ஓக்கள் பணியில் இருப்பார்கள். அவர்கள் புகார்களை கவனிப்பார்கள்.
தபால் வாக்குகளைப் பொறுத்தவரை, சுற்றுவாரியாக எண்ணப்படாது. தபால் வாக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் உள்ள கையொப்பம் சரியாக உள்ளதா? என்பதை பார்த்து, எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தபால் வாக்குகள் எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கும். 8.30 மணிக்கு தபால் வாக்கு எண்ணி முடிக்காவிட்டாலும், மின்னணு இயந்திர வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படும். தபால் வாக்குகள் இல்லாவிட்டால், மின்னணு வாக்குகள் 8 மணிக்கு எண்ணப்படும்.
தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு கட்டாயம் 5 விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும். இதுதவிர, வேட்பாளர்கள் கோரும் பட்சத்தில், அவர் கூறும் இயந்திரங்களை தேர்தல் பார்வையாளர்கள் முடிவு செய்து, அதை எண்ண அனுமதிப்பார்கள். தபால் வாக்குடன் இணைத்து, ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் மின்னணு தபால் வாக்கும் எண்ணப்படும்,’ என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment