Last Updated : 03 Jun, 2024 02:01 PM

 

Published : 03 Jun 2024 02:01 PM
Last Updated : 03 Jun 2024 02:01 PM

சட்டவிரோத தாய்ப்பால் விற்பனை: சென்னையில் தொடரும் சோதனை

சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த தனியார் புரோட்டீன் மருந்து விற்பனை கடையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு, கடைக்கு சீல் வைத்தனர். | கோப்புப்படம்

சென்னை: சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருந்து விற்பனை நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (திங்கள்கிழமை) சோதனையிட்டனர்.

சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் மருந்து விற்பனையகத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வந்ததையடுத்து, அக்கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை செய்வது குறித்த விசாரணை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாக துறை சார்பில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் மாதவரத்தை தொடர்ந்து அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் அமைந்துள்ள தனியார் மருந்து மொத்த விற்பனையகத்தில் சட்டத்துக்கு புறம்பாக தாய்ப்பால் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் குழு இன்று காலை அந்நிறுவனத்தின் குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் 50 மி.கி அளவு கொண்ட 30-க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு ரூ.500-க்கு விற்கப்படுவது தெரியவந்தது. மேலும் குறிப்பாக தாய்ப்பாலை பவுடர் வடிவில் பதப்படுத்தி, குளிர்ச்சியாக்கி 20 மி.கி பாக்கெட்டுகளில் (-10 டிகிரி செல்சியஸில்) அடைத்து விற்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மாதிரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் எந்த உரிமமும் பெறாமல் சட்டவிரோதமாக தாய்ப்பாலை இம்மருந்து நிறுவனம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x