Published : 03 Jun 2024 06:58 AM
Last Updated : 03 Jun 2024 06:58 AM

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் இயந்திரத்தை வேட்பாளர்கள் சோதனையிடலாம்: வழிகாட்டுதல் வெளியிட்டது ஆணையம்

சென்னை: தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, வாக்குப்பதிவு தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள, தேர்தலில் 2, 3-வது இடம்பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல்26-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் 2, 3-வது இடம் பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தின் நினைவகம் அல்லது மைக்ரோ கன்ட்ரோலர் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் 5 சதவீதத்தை வேட்பாளர் அல்லது முகவர்களின் முன்னிலையில், இயந்திர தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலர்கள் மூலம் பரிசோதனை செய்யலாம். இயந்திரத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா, சீல்உடைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம் என்றுஅந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்து.

இதன் அடிப்படையில், தற்போது நிலையான வழிகாட்டுதல்களை அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

அதன்படி, இத்தகைய பரிசோதனை பணிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிதான் பொறுப்பு. அவர் துணை தேர்தல் அதிகாரி ஒருவரை இதற்காக நியமிக்கலாம்.

தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு அடுத்தபடியாக 2, 3- வது இடத்தில் உள்ள வேட்பாளர்கள், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 சதவீத கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரங்களை பரிசோதனை செய்ய விண்ணப்பிக்கலாம். இருவரும் விண்ணப்பித்தால், ஒருவருக்கு 2.5 சதவீதம் என்ற அடிப்படையில் பரிசோதனை செய்யப்படும்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வேட்பாளர்கள் ரூ.40 ஆயிரம் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். கட்டுப்பாட்டு இயந்திரம், மின்னணு இயந்திரம், விவிபாட் இயந்திரத்தின் குறியீட்டு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் அடங்கிய நிலையானவழிகாட்டு நெறிமுறைகள் அதில் கூறப்பட்டுள்ளன.

பொறுப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முதல் கட்டத்தில் ஏப்.19-ம் தேதிநடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 வாக்குஎண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை ஜூன் 4-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

முன்னதாக, தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றபோது, பணிகளை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம், ஒருதொகுதிக்கு ஒருவர் என 39வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்தது. தற்போது வாக்கு எண்ணிக்கைக்காக, கூடுதலாக 19 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் பொது பார்வையாளர்களின் பணிகளை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்கான உதவிகளுக்காகவும் தமிழக அரசு சார்பில் பொறுப்பு அதிகாரிகளாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப், பொதுத்துறை செயலர் நந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x