Published : 02 Jun 2024 04:31 PM
Last Updated : 02 Jun 2024 04:31 PM

வாக்கு எண்ணும் மையங்களில் தட்டுப்பாடின்றி குடிநீர்: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

ராணி மேரி கல்லூரியில் உள்ள வாக்க எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். 

சென்னை: சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்பட உள்ளன.

இந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக, இந்த மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் அறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணும் பகுதி, ஊடக மையம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உணவு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகன நிறுத்த இடங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

கோடை காலம் என்பதாலும், தற்போது சென்னையில் கடும் வெப்பம் நிலவி வருவதாலும், பணியாளர்கள், முகவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, ஜி.எஸ்.சமீரன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x