Published : 02 Jun 2024 02:59 PM
Last Updated : 02 Jun 2024 02:59 PM

அண்ணாமலையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம்: துரை வைகோ

மதுரை: இண்டியா கூட்டணி பற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூர் அருகே தண்டலை பகுதியில் மதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின்பு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. இது நூறு சதவீதம் நடக்கும். தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. ஆகையால் 100% தமிழகத்தில் வெற்றி பெறுவோம்.

ஆனால் மத்தியில் பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புக்கு இன்னும் 48 மணி நேரம் பொறுத்திருக்க வேண்டும். பிறகுதான் சொல்ல முடியும். இண்டியா கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். இன்னும் 48 மணி நேரத்தில் பொதுமக்களுக்கு இந்த உண்மை தெரியவரும். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறும் கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்

அப்போது தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இண்டியா கூட்டணி காணாமல் போய்விடும் என்று அண்ணாமலை கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "அண்ணாமலை அரசியலுக்கு வந்தது முதல் தவறான கருத்துக்களை, வதந்திகளை மட்டுமே சொல்லி வருகிறார். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இண்டியா கூட்டணி காணாமல் போய்விடும் என்று அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து. அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியையும் காணாமல் போய்விடும் என்று யாரும் சொல்ல முடியாது. அது மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அண்ணாமலை பேசியது சர்வாதிகாரத்தனமான பேச்சு. தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை வந்தால் மத்திய அமைச்சரவையில் மதிமுக கண்டிப்பாக இடம்பெறாது" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x