Published : 02 Jun 2024 09:28 AM
Last Updated : 02 Jun 2024 09:28 AM

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தரிசனம்

விருத்தாசலம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தனது குடும்பத்தினருடன் வழிபட்டார்.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், குடும்பத்தினருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஹெலிகாப்டர் தளத்துக்கு நேற்று காலை வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார்.

முதல்வர் மோகன் யாதவை சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழுவினர் கும்ப மரியாதையுடன், மேளதாளம் முழங்க வரவேற்றனர். கோயிலில் பகல் 12 மணி பூஜை முடிவடைந்ததால், கோயில் கருவறைக்கு முன்புள்ள கனக சபையில் ஏற அவரை அனுமதிக்கவில்லை. பின்னர் அவர் கனக சபையின் கீழே இருந்து குடும்பத்தினருடன் வழிபட்டார். தொடர்ந்து, கோயில் பிரகாரங்களைச் சுற்றி வந்து வழிபட்டார்.

பின்னர், தீட்சிதர்கள் முதல்வரின் குடும்பத்தினரை கோயில் தேவசபை முன்பு அமர வைத்து, மாலை அணிவித்து, பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர். தொடர்ந்து, அவர் கோயில் சிறப்பு விருந்தினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். வழிபாடுகளை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரம் கோயிலுக்குப் புறப்பட்டார்.

மத்திய பிரதேச முதல்வர் வருகையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் ஹெலிகாப்டர் தளத்தில், சிதம்பரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x