Last Updated : 02 Jun, 2024 06:18 AM

 

Published : 02 Jun 2024 06:18 AM
Last Updated : 02 Jun 2024 06:18 AM

தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர்: 3 நாட்களும் தூக்கமின்றி மவுன விரதம்

பிரதமர் மோடி

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று மதியம் நிறைவு செய்தார். கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையை வணங்கிய பின், படகில் கரை திரும்பினார். பின்னர் மாலையில் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி சென்றார்.

இந்தியாவின் தென்முனையில் கடல் நடுவே அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30-ம் தேதி இரவு தியானத்தை தொடங்கினார். நேற்று 3-வது நாளாக அவர் தியானத்தில் ஈடுபட்டார்.

இந்த 3 நாட்களும் பிரதமர் மோடி தூங்கவேயில்லை. அதுபோல், 3 நாட்களும் மவுன விரதத்தை கடைபிடித்தார். விவேகானந்தர் மண்டப ஊழியர்கள், பாதுகாவவர்களிடம் சைகையிலேயே பேசியுள்ளார். ஏசி அறையில் தங்க மறுத்துவிட்டார்.

நடைபயிற்சி: நேற்று முன்தினமும், நேற்றும் அதிகாலையில் சூரிய உதயகால பூஜைகளை நடத்தினார். பின்னர் தியானத்தை தொடர்ந்தார், நேற்று முன்தினம் மாலையில் சூரியன் மறையும் சமயத்தில் சூரிய அஸ்தமன பூஜைகளை நடத்தினார். இரவில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.

நேற்று அதிகாலை 5.40 மணியளவில் காவி உடையுடன் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த பிரதமர், சூரிய வழிபாடு செய்தார் பின்னர் விவேகானந்தர் மண்டபத்தின் பிரதான பாதையில் உள்ள படிக்கட்டுகளில் இருமுறை மேலும், கீழும் ஏறி இறங்கி நடைபயிற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து, பகவதி அம்மனின் ஸ்ரீபாத மண்டபத்திலும், விவேகானந்தர் மண்டபத்திலும் தியானம் மேற்கொண்டார்.

காலை 7.30 மணியளவில் தியான அறைக்கு சென்று மீண்டும் தியானத்தில் ஈடுபட்ட அவர், மதியம் 1 மணிக்கு தியானத்தை நிறைவு செய்தார். 3 நாட்களில் பிரதமர் மோடி 40 மணி நேரம் தியானம் மேற்கொண்டார்.

தியானத்தை நிறைவு செய்தபின், தியான அறைக்கு அருகே உள்ள அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர், வெளியே வந்து விவேகானந்தர் மண்டப படிக்கட்டில் நின்றவாறு கேந்திரா நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அங்கிருந்து விடைபெற்ற பின்னர், தனிப்படகு மூலம் மதியம் 2.50 மணியளவில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் பாறைக்கு சென்றார். அங்குள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் ரோஜா மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார்.

பின்னர், மாலை 3.10 மணியளவில் 'விவேகானந்தா' என்ற படகில் ஏறி படகு தளத்துக்கு 3.20 மணிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு சுற்றுலா மாளிகைக்கு 3.26 மணிக்கு வந்து சேர்ந்தார்.

சுற்றுலா மாளிகையில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளுடன் சுமார் 25 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். மாலை 3.56 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடி நேற்று விவேகானந்தர் பாறையில் இருந்து புறப்படத் தயாரானபோது, கடற்படை ஹெலிகாப்டர்கள் விவேகானந்தர் பாறை மற்றும் கடல் பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ரோந்து சுற்றியவாறு பாதுகாப்பில் ஈடுபட்டன. கடலோர காவல்படையினர் இரு கப்பல்களில் ஆழ்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட மெரைன் படகுகள் கடலில் சுற்றியபடி இருந்தன. மீனவர்களின் விசைப் படகுகளிலும் மெரைன் போலீஸார் கடலுக்குள் சென்று பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

குஜராத்தி உணவு: தியானத்தை நேற்று மதியம் நிறைவு செய்த பின்னர், குஜராத்தி உணவு வகைகளை விருப்பமுடன் சாப்பிட்டார். காவி உடையை மாற்றிக்கொண்டு, வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து, விவேகானந்தர் பாறையில் இருந்து புறப்பட்டார். அங்கிருந்து புறப்படும் முன்பு விவேகானந்தர் மண்டபத்தை வணங்கிச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x