Published : 01 Jun 2024 11:11 AM
Last Updated : 01 Jun 2024 11:11 AM

வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி: இறுதிகட்ட தேர்தல் நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு

முதல்வர் ஸ்டாலின் , காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி - கோப்புப் படம்

சென்னை: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நடைபெற்று வரும் சூழலில், ‘வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய எக்ஸ் பதிவில், “பாஜக.,வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது.

தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பாஜக.,வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இண்டியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பாஜக வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உறுதிப்படுத்திய முதல்வர்.. இண்டியா கூட்டணி தலைவர்கள் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.

இக்கூட்டத்தில், கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இறுதிக் கட்ட வாக்குப் பதிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் வாசிக்க >> இண்டியா கூட்டணியில் தனித்து நிற்கிறாரா மம்தா?- ஜுன்.4-க்குப் பின் இறுதி நிலைப்பாடு

இ்ந்நிலையில், இண்டியா கூட்டணி உருவாகுவதில் முக்கிய பங்காற்றிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக முதல்வர் ஜூன் 1-ம் தேதி காலை 7 மணிக்கு டெல்லி புறப்படுகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று, முதல்வரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வரின் இன்றைய எக்ஸ் பதிவில், “இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.” என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x