Last Updated : 30 May, 2024 06:51 PM

2  

Published : 30 May 2024 06:51 PM
Last Updated : 30 May 2024 06:51 PM

“அதிமுக அணையப் போகும் விளக்கு என்பதால் பிரகாசமாக எரிகிறது!'' - அண்ணாமலை கருத்து

அண்ணாமலை.

காரைக்குடி: ''அதிமுக அணையப் போகும் விளக்கு. அதனால் பிரகாசமாக எரிகிறது'' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி காரைக்குடி செட்டிநாட்டுக்கு வந்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழக தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித் ஷா திருமயம் பைரவர் கோயிலுக்கு வருவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக செல்ல முடியவில்லை. எனினும், தேர்தல் முடிவதற்குள் அந்தக் கோயிலுக்கு வருவதாக உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதன்படி தேர்தல் பிரச்சாரம் முடியும் கடைசி நாளில் கோயிலுக்கு வந்துள்ளார்.

கன்னியாகுமரியில் கடந்த 1892-ம் ஆண்டு டிச.24 முதல் டிச.26-ம் தேதி வரை சுவாமி விவேகானந்தர் கடும் தவம் புரிந்தார். அந்தத் தவம் மூலம் இந்தியாவின் தன்மை, வளர்ச்சியை அவர் உணர்ந்ததாக கூறப்படுகிறது. விவேகானந்தர் மண்டபத்தை தனியார் அமைப்பு நிர்வகித்து வருகிறது. கடந்த காலத்தில் பெரிய போராட்டத்துக்குப் பின்னரே விவேகானந்தர் பாறையில் மண்டபம் கட்டப்பட்டது. தற்போது தனியார் அமைப்பு அழைப்பின் பேரிலேயே பிரதமர் அங்கு வந்துள்ளார். அதனால் தான் கட்சியினர் யாரும் அங்கு செல்லவில்லை.

மோடி, அமித் ஷா ஆகிய இரு பெரும் தலைவர்களும் தேர்தல் தொடக்கத்திலும், முடிவிலும் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அதனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதில் தமிழகம் பெரும் பங்கு வகிக்கும்.

மக்கள் மன்றத்தில் இந்துத்துவா குறித்து விவாதம் நடப்பது சந்தோஷம்தான். இதன்மூலம் இந்துத்துவா குறித்த உண்மையான விளக்கம் வெளியே வரட்டும். இந்து யாருக்கும் எதிரி கிடையாது. இஸ்லாம், கிறிஸ்துவத்துக்கு எதிரி என்று கூறுபவர்கள் இந்துத்துவவாதியே கிடையாது.

ஜூன் 4-க்கு பின்னர் அதிமுக எங்கே இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். அதிமுக, பாஜக எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்பதையும் பார்ப்போம். மேலும், எந்தக் கட்சி மக்கள் மனதை பிடித்திருக்கிறது. எந்தக் கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்பதை பார்ப்பீர்கள். விளக்கு அணையும்போது பிரகாசமாக எரியும் என்பர். அதனால் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.

கோவை, தஞ்சை உள்ளிட்ட நாங்கள் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும்போது தமிழகத்தின் பங்கு இருக்க வேண்டும். எங்களது வெற்றி தனிப்பட்ட லாபத்துக்கானது அல்ல. தமிழக எம்பி-க்கள் அதிகமாக இருந்தால் வளர்ச்சி பணிகளை கூடுதலாக செய்ய முடியும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x