Published : 29 May 2024 01:28 PM
Last Updated : 29 May 2024 01:28 PM

‘‘விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 18 மணி நேரம் வழங்க வேண்டும்’’ - அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

விவசாயிகள்

சென்னை: தமிழக அரசு விவசாயிகளுக்கு கடன் வசதி, காப்பீட்டுத் திட்டம், தொகுப்புத் திட்டம் மற்றும் மும்முனை மின்சாரம் ஆகியவற்றை உறுதி செய்து கார்கால குறுவைப் பயிர் சாகுபடிக்கு உதவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசு கார்காலத்தில் (மே - ஜூன் மாதத்தில்) விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் டெல்டா மாவட்டப் பகுதிகளில் சுமார் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி செய்யும் நிலை இந்த ஆண்டு மாறியுள்ளது.

அதாவது உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் போகின்ற வேளையில் மேட்டூர் அணை நீரை நம்பி பாசனம் செய்யும் சாகுபடி பொய்த்துப் போகும். தமிழக அரசு தஞ்சை மாவட்டப் பகுதி விவசாயிகளுக்கு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு (Packs) சிஸ்ட்டம் 45 kg யூரியா, 25 kg பொட்டாசியம், 50 kg DAP அம்மோனியம் பாஸ்பேட் 25kg (2700 ரூபாய்) அளவில் உரம் கொடுக்கப்படும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராத பட்சத்தில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் சுமார் 4 1/2 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய தயார் நிலையில் உள்ளனர்.

குறிப்பாக திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்கா, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளிலும் மின்மோட்டார் மூலம் ஏரி, குளம் சார்ந்த பகுதிகளில் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர்.

இச்சூழலில் தமிழக அரசு குறுவை தொகுப்புத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் மும்முனை மின்சாரம் குறைந்தது 18 மணி நேரம் வழங்க வேண்டும் என்றும் காப்பீட்டுத் திட்டத்தை குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் குறுவை சாகுபடி செய்யும் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் காலத்தே கடன் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே தமிழக அரசு விவசாயிகள் கார்காலத்தில் குறுவைப் பயிர் செய்வதற்கு ஏதுவாக கடன் வசதி, காப்பீட்டுத் திட்டம், தொகுப்புத் திட்டம் மற்றும் மும்முனை மின்சாரம் ஆகியவற்றை உறுதி செய்து கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x