Published : 29 May 2024 05:06 AM
Last Updated : 29 May 2024 05:06 AM

தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நாளை வருகை: கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குமரி விவேகானந்தர் பாறையை சுற்றியுள்ள கடல் பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மெரைன் போலீஸார்.

நாகர்கோவில்: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (மே 30) மாலை 3.55 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார்.அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு 4.35 மணி அளவில் வருகிறார். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மாலை 5.30 மணி அளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனி படகு மூலம் செல்கிறார். அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியானக் கூடத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார்.

நாளை மாலையில் இருந்து ஜூன் 1-ம் தேதி மாலை வரை விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தியானம் செய்கிறார். மாலை 3.30 மணிஅளவில் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும் வான்வழித்தடத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. டெல்லியில் இருந்து வந்துள்ள, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஹெலிகாப்டர் தளம், படகு தளத்தில் ஆய்வு செய்தனர். கடற்படையினர், கடலோரக் காவல் படையினர் கடல்பகுதிகளை தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

பிரதமரின் வருகையால், நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரை விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x