Published : 29 May 2024 04:54 AM
Last Updated : 29 May 2024 04:54 AM

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள்: வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது. வீட்டின் கூரை, சுவர்கள் கட்டுமானம், செலவு தொகை, பயனாளிகளை தேர்வு செய்யும் விதம் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியிட்டார்.

தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட்(ஆர்சிசி) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம்ஆகும்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, இதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின.

இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல் களை ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பி.பொன்னையா வெளியிட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம்: தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், இந்த 2024-25நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டுதல்கள் வெளி யிடப்பட்டுள்ளன. இதையடுத்து, இத் திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

வீடுகள் அனைத்தும் 360 சதுரஅடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும். இதில் 300 சதுரஅடி கான்கிரீட் (ஆர்சிசி) கூரையுடனும், எஞ்சிய 60 சதுரஅடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்க வேண்டும்.

ஓலை, ஆஸ்பெஸ்டாஸ் கூரைஅமைக்க கூடாது. ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்துரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட்டிருக்க வேண்டும். மண்ணால் கட்டப்பட கூடாது. செலவை குறைக்கும் தொழில்நுட்பங்கள், விரைவான கட்டுமானம் போன்றவை அனுமதிக்கப்படுகிறது.

குடிசையில் வாழ்பவர்கள், கேவிவிடி (கலைஞரின் வீட்டுவசதி திட்டம்) மறு சர்வே பட்டியலில் தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டவர்கள் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவர். மேலும், ஒரு கிராம ஊராட்சியில் பயனாளிகள் குறைவாக இருந்தாலோ, கேவிவிடி மறு சர்வே பட்டியலில் யாரும் இடம்பெறவில்லை என்றாலோ, புதிய குடிசைகள் சர்வே மற்றும் அனைவருக்கும் வீடு சர்வே பட்டியலில் உள்ள குடிசை வீட்டு பயனாளிகள் மட்டும் இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேலும், கேவிவிடி சர்வே மற்றும் புதிய குடிசைகள் சர்வே விவரங்களை ஊரக வளர்ச்சி துறை இணையதளத்தில் வரும் மே 31-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகளை, கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும். இந்த குழு அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதிகள் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். பட்டியலில் தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களை சேர்க்க வேண்டும். விடுபட்டவர்கள் பட்டியலுக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, அதன்பிறகு, பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

மேலும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் (ஊரகம்) 25 முதல் 50 வீடுகள் நிலுவையில் இருந்தால், அந்த ஊராட்சி இந்த ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்ல திட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படாது. அதேபோல, 50-க்கு மேற்பட்ட வீடுகள் ஊரக வீடுகள் திட்டத்தின்கீழ் பழுதுபார்ப்புக்கு எடுக்கப்பட்டிருந்தால் அந்த ஊராட்சிகளையும் இதில் சேர்க்க வேண்டியது இல்லை.

இதன் அடிப்படையில், வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை வட்டம் மற்றும் கிராம அடிப்படையில் தயாரித்து ஊரக வளர்ச்சி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x