Last Updated : 28 May, 2024 08:45 PM

2  

Published : 28 May 2024 08:45 PM
Last Updated : 28 May 2024 08:45 PM

எண்ணூர் கூலித் தொழிலாளி வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.32 லட்சம் டெபாசிட்: கணக்கு முடக்கப்பட்டதால் அவதி

சென்னை: எண்ணூரில் கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.32 லட்சம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள எண்ணூரைச் சேர்ந்தவர் மதியழகன். கூலித் தொழிலாளியான இவர் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் எண்ணூர் கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், மதியழகன் தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கட்டணம் செலுத்த பணம் எடுக்க வங்கிக்கு இன்று (மே 28) சென்றார். தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் பணம் எடுப்பதற்காக படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். அப்போது, அவரது சேமிப்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட மதியழகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டபோது, ‘உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கும்பல் ஒன்று ரூ.32 லட்சத்தை வேறொரு வங்கிக் கணக்குக்கு அனுப்புவதற்காக பதிலாக, தவறுதலாக மதியழகனுடைய கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதால் மதியழகனுடைய சேமிப்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.இதனால், மதியழகன் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவர் வங்கி மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இந்த மோசடி குறித்து விசாரித்து வரும் உத்தரகண்ட் மாநில சைபர் கிரைம் போலீஸார் மதியழகனின் வங்கிக் கணக்கை முடக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து, நாங்கள் அவருடைய வங்கிக் கணக்கை முடக்கி உள்ளோம். விசாரணை முடிந்ததும் மதியழகன் வங்கிக் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x