Published : 28 May 2024 02:06 PM
Last Updated : 28 May 2024 02:06 PM

உலக பட்டினி தினம்: 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கிய நடிகர் விஜய் கட்சியினர்

உலக பட்டினி தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை, அம்பத்தூர் பழைய இஎஸ்ஐ சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.பாலமுருகன் உணவு வழங்கினார்.

சென்னை: இன்று உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டனர். தற்போது வரை உறுப்பினர் சேர்க்கை ஒரு கோடியை நெருங்கி உள்ளது. தொடர்ந்து, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்கிடையே, ‘இல்லாதோருக்கு உணவு வழங்குவோம்’ என்ற கருத்துடன் மே 28-ம் தேதி உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதேபோல் இந்த ஆண்டும் 234 தொகுதிகளிலும் உணவு வழங்க வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து, சமபந்தி விருந்தில் பங்கேற்றார். தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜி.பாலமுருகன் 20 இடங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கினார்.

தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் அப்புனு தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் உணவு வழங்கினார். இதேபோல் மாநிலம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இன்று ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 3.50 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. அதேசமயம், தமிழகத்தில் 23 இடங்களில் ‘தளபதி விலையில்லா விருந்தகம்’ வாயிலாக தினமும் காலை வேளையில் இலவச உணவு வழங்கப்படுகிறது.

வரும் காலங்களில் கட்சி நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்களின்போது ஆதரவற்ற இல்லங்களில் வசிப்போருக்கும் உணவு அளிக்கவுள்ளனர். திருமண மண்டபத்தில் உணவு வீணாவதைத் தடுக்கும் வகையில் அங்கு சமைக்கப்படும் உணவை முதியோர் இல்லங்களுக்கு கொண்டு செல்லும் பணியையும் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்வர். ஜுன் 22-ம் தேதி கட்சித் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட உதவிகளைச் செய்யவுள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x