Published : 25 May 2024 05:52 PM
Last Updated : 25 May 2024 05:52 PM

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு எதிரான பினாமி சட்ட நடவடிக்கை: இறுதி உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் இடைக்கால தடை

கதிர் ஆனந்த் | கோப்புப்படம்

சென்னை: வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தேர்தல் நேரத்தில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் கதிர் ஆனந்துக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், விமலா தாமோதரன் என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தொகை கதிர் ஆனந்துக்கு சொந்தமானது எனக்கூறி, அவருக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் மே 31 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி கதிர் ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், ‘எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கில் கதிர் ஆனந்தை இணைத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் மே 31 அன்று மனுதாரர் அல்லது அவரது தரப்பு வழக்கறிஞர் விசாரனை அதிகாரி முன்பாக ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜூன் மூன்றாவது வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x