Published : 24 May 2024 06:10 AM
Last Updated : 24 May 2024 06:10 AM

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தடுக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை உடனே தடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே வட்ட வடா என்ற இடத்தில்கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணியை துரித கதியில் நிறைவேற்றி வருகிறது.

முதல்கட்டமாக, ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம், 120 அடி நீளத்தில் இந்த தடுப்பணை அமைக்கும் பணி வெகு வேகமாக நடந்து வருகிறது. இப்பணி முடிவுற்றால் கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்டபல பகுதிகளுக்கு பாசனம் மற்றும்குடிநீர் பெறுவதற்கு சாத்தியமா காது. தமிழக மாவட்டங்களில் ஓடிவரும் அமராவதி ஆறு நீர்வழி பயன்பாடு தடைபடும்.

காவிரி நடுவர் மன்றம் மற்றும்உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக,மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமலேயே சிலந்திஅணை கட்டுமானம் நடந்து வருகிறது. அண்டை நட்பு மாநிலமான தமிழகத்தின் உறவு பாதிக்கும் என்பதை கேரளா மாநில அரசு கவனத்தில் கொள்ளாமல், இந்த தடுப்பணையை கட்டுவது என்பது வஞ்சக செயலாகும்.

குடிநீருக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கேரளாஅரசு கூறினாலும் இந்த அணையின் அருகே அமைந்துள்ள கார்ப்பரேட் நிறுவன நீர் சுத்திகரிப்பு ஆலைக்காகவே அணை கட்டப்படுவதாக செய்தி வருகிறது. இச்சூழலில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி, தானாக முன்வந்து இதை விசாரணைக்கு உடனடியாக எடுத்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது.

எனவே, தமிழக அரசு உடனே கேரளா அரசுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்திட வேண்டும். கட்டுமான பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் வழக்கில் தமிழக அரசும்இணைந்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுத்திட வேண்டும். இல்லையேல் உச்ச நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்து இதை தடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x