Published : 21 May 2024 05:07 PM
Last Updated : 21 May 2024 05:07 PM

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை

கேரளா மாநிலத்துக்குட்பட்ட சிலந்தி ஆற்றின் குறுக்கே வேகமாக நடை பெற்றுவரும் அணை கட்டுமானப் பணி | கோப்புப்படம்

சென்னை: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாய பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமராவதி அணையின் நீர் ஆதரமாக சிலந்தி ஆறு உள்ளது. அமராவதி ஆற்றுப் படுகையில் 110 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து முழுவதும் குறைந்துவிடும். இதனால் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதாக பொதுமக்களும் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசையும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இன்று (மே 21) ) விசாரித்தனர்.

அப்போது, 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரளா அரசு உரிய அனுமதி பெற்றுள்ளதா?' என கேள்வி எழுப்பினர். மேலும், உரிய அனுமதி பெறாவிட்டால் தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த தடுப்பணை கட்டுவதால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட தீர்ப்பாயம், இவ்வழக்கு விசாரணையை வரும் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x