Published : 20 May 2024 10:07 PM
Last Updated : 20 May 2024 10:07 PM

சிலந்தி ஆறு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு பதில்

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்

சென்னை: காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார். “கள்ள மவுனம்” எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த கலை என்பதைக் காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் பிரச்சினைகள், தேர்தல் கூட்டணியிலும் தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த வாசகத்துக்கு மறு உருவம் பழனிசாமிதானே தவிர வேறு யாருமல்ல. காவிரி இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்குக் கிடைத்த நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி நீரைக் கள்ள மவுனம் சாதித்துத் தாரை வார்த்தது இதே பழனிசாமிதான் என்பதை இந்த நேரத்தில் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழக அரசைப் பொருத்தவரை, காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 16.05.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு ஆகியவற்றுக்கு மாறாக, கர்நாடக மற்றும் கேரள அரசுகள் நடந்துகொள்ள முயற்சிக்கும்போதெல்லாம் அதை அரசியல்ரீதியாக, மத்திய அரசு வாயிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்கள் வாயிலாகக் கடுமையாக எதிர்த்து வருகிறது தமிழக அரசு என்பதுதான் உண்மை.

அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாற்றின் (“வட்டவடா” எனக் கேரளாவில் அழைக்கப்படுகிறது) உபநதி சிலந்தி ஆறு ஆகும். இதைப் பொருத்தவரை, சென்ற 04.04.2024 அன்று நடைபெற்ற 29-வது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலேயே “காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும்” எனத் தமிழகத்தின் உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலர், அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்.

இதை இனி வரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவார். ஆகவே, காவிரி தீர்ப்பினை மீறும் விதமாகக் கேரளாவோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து, தமிழகத்தின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக மட்டுமல்ல, அனைத்து விதத்திலும் தமிழக அரசு நிலைநாட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x