Last Updated : 18 May, 2024 10:43 AM

 

Published : 18 May 2024 10:43 AM
Last Updated : 18 May 2024 10:43 AM

திருவேற்காட்டில் 3 தலைமுறைகளாக வசிக்கும் பூர்வகுடி மக்களை வெளியேற்றக் கூடாது: சீமான்

சீமான்

சென்னை: திருவேற்காட்டில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் பூர்வகுடி மக்களை வெளியேற்றக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காட்டில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக 3 தலைமுறைகளாக பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி திமுக அரசு அப்புறப்படுத்த முயல்வது கண்டிக்கத்தக்கது.

தற்போது 300 குடும்பங்களாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்தையும் பெற்று வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கு செலுத்தி வாழ்ந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவது மனிதநேயமற்றது. அதுவும் கடந்த 60 ஆண்டுகளாக வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள், இப்போது மட்டும் எப்படி ஆக்கிரமிப்பாகத் தெரிகிறது?

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்கிறது. இதுதான் சமூக நீதியா?

எனவே திருவேற்காட்டில் 3 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ் தொல்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும். அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x