Last Updated : 17 May, 2024 04:25 PM

2  

Published : 17 May 2024 04:25 PM
Last Updated : 17 May 2024 04:25 PM

மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு மீண்டும் தடை: போலீஸ் குவிப்பு

பட விளக்கம்; மரக்காணம் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளர்

விழுப்புரம்: மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்களைத் தடுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் மரக்காணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மரக்காணம், தர்மாபுரி வீதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோயில். இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத பஞ்சமி திதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். தொடர்ச்சியாக 22 நாட்களுக்கு மகாபாரதம் நிகழ்ச்சிகளை வலியுறுத்தும் வகையில் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழா இப்பகுதி பொதுமக்களால் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல வேண்டும் என சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோயிலை இந்து அறநிலையத்துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இந்த கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க கூடாது என இப்பகுதி பொதுமக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனிடையே கடந்த ஆண்டு வழக்கம் போல் 22 நாள் திருவிழாவை பொதுமக்கள் நடத்தினர்.

இந்த ஆண்டு சித்திரை மாத பஞ்சமி திதியன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் அன்று வழக்கம்போல் கொடியேற்று விழா நடத்தவில்லை. இதனிடையே இப்பகுதி பொதுமக்களின் சார்பில் கோயிலின் பாரம்பரிய தர்மகத்தா மன்னாதன் கடந்த 7-ம் தேதி கோயில் திருவிழாவை வழக்கம்போல் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயில் திருவிழா வழக்கம்போல் நடத்திக் கொள்ளலாம் என கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் கடந்த 12 ம் தேதி கொடியேற்றம் நடத்தி திருவிழாவை தொடங்க அப்பகுதி பொதுமக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால், கோயில் திருவிழாவை நடத்தக்கூடாது என இந்து அறநிலையத்துறை தடைவிதித்தது. இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 12-ம் தேதி சமாதான கூட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள், "நீதிமன்ற உத்தரவு படி தான் நாங்கள் திருவிழா நடத்த முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினர். அதற்கு அரசு அதிகாரிகள் "நீதிமன்ற உத்தரவு நகலை எங்களிடம் காட்டிவிட்டு திருவிழா நடத்திக் கொள்ளலாம்" என கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சமாதானம் அடைந்து அன்று கொடியேற்றம் நடத்தாமல் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொடியேற்றம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பொதுமக்கள் செய்தனர். ஆனால், இன்றும் “நீங்கள் கொடியேற்று விழா நடத்தக்கூடாது” என்று அறநிலையத்துறையினர் தடைபோட்டனர். அப்போது பொதுமக்கள் சார்பில் நீதிமன்ற உத்தரவு நகலை அதிகாரிகளிடம் காட்டினர்.

அதற்கு, “நீங்கள் 22 நாள் விழாவை பல சமூகங்களை சேர்ந்தவர்கள் வழக்கமாக நடத்தி வந்தீர்கள். ஆனால், திருவிழாவில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிமை கொடுக்க வேண்டும் என விசிக சார்பில் இந்து அறநிலையத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விசிக கோரிக்கைபடி பட்டியல் இன மக்களுக்கு ஒரு நாள் திருவிழா நடத்த அனுமதி கொடுத்தால், நீங்கள் வழக்கம் போல் திருவிழா நடத்த அனுமதிப்போம்” என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் கொடியேற்றம் நடக்காமல் தடைபட்டு நின்றது. இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் மரக்காணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x