Published : 17 May 2024 12:06 PM
Last Updated : 17 May 2024 12:06 PM

கொட்டித் தீர்த்த மழை: ஈரோட்டில் ஒரு வாரத்தில் 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்

வாழை மரங்கள் சேதம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், ஈரோட்டில் ஒரு வாரத்தில் மட்டும், 3 லட்சம் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தாளவாடி, பவானிசாகர், சத்தியமங்கலம், அந்தியூர், அத்தாணி, கோபி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

இயற்கை பேரிடர்களால் இது போன்று பயிர்கள் சேதமடையும் போது, வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையினர் இணைந்து, சேதம் குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டு, இழப்பீட்டிற்காக, அரசுக்கு பரிந்துரைப்பது வழக்கம். வாழை மரம் தோட்டக்கலைத்துறையின் கீழ் வரும் நிலையில், சேதமடைந்த வாழைமரங்களை வருவாய்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் இணைந்து கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது; ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, சத்தியமங்கலம், ப்வானிசாகர், அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய வட்டாரங்களில் கடந்த 1-ம் தேதி முதல், 7-ம் தேதி வரை, பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், லட்சக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்துள்ளது.

வருவாய்த்துறையினருடன் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில், 269 விவசாயிகளுக்குச் சொந்தமான, 120 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 3 லட்சம் வாழைமரங்கள் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, ஈரோடு ஆட்சியர் மூலம், தமிழ்நாடு வருவாய்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு வாரத்தில் மட்டும் 3 லட்சம் வாழைமரங்கள் சேதமடைந்த நிலையில், அதன்பின்பும் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் இப்பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால், சேதமடைந்த வாழைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்த விவசாயிகள், இழப்பீட்டினை விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x