Published : 13 May 2024 06:17 AM
Last Updated : 13 May 2024 06:17 AM

தமிழகம் முழுவதும் 8.16 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 1 பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு

சென்னை: பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 14) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 20,187 பள்ளி மாணவர்கள், 4,945 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.25 லட்சம் பேர் பதிவு செய்தனர். அவர்களில் 8.16 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 83 முகாம்களில் ஏப்ரல் 6-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை நாளை (மே 14) காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்னேற்பாடுகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x