Published : 12 May 2024 03:16 PM
Last Updated : 12 May 2024 03:16 PM

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர் (48) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு இன்று (மே 12) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப் பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப் பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x