Published : 11 May 2024 10:36 AM
Last Updated : 11 May 2024 10:36 AM

6 நாட்களில் 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: அச்சத்தில் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள்

கோப்புப் படம்.

சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் இன்று (மே.11) காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. கடந்த 6 நாட்களுக்குள் நடந்த 4வது விபத்து இது என்பதால் பட்டாசு தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அதில் தமிழகத்திலேயே பட்டாசு தொழிற்சாலை அதிகமுள்ள விருதுநகர் மாவட்டம் மற்றும் இதர பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு, உயிர்சேதம் அதிகரிக்கிறது.

அந்தவகையில், அண்மையில் செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பட்டாசு தொழிலாளர்களில் அவலநிலையையும், அத்தொழிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விவாதங்ளுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தச் சூழலில், இன்று காலை மேலும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. சிவகாசி காத்த நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம்(47). இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று சிவகாசி அருகே நாரணாபுரத்தில் மகேஸ்வரி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 42 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யபடுகிறது. இந்நிலையில் இன்று காலை 6:15 மணி அளவில் பட்டாசு ஆலையில் வெடி மருந்து இருப்பு வைத்திருக்கும் அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை

இந்த விபத்தில் வெடி மருந்துகள் இருப்பு வைத்திருந்த சல்பர் அறை, கரி தூசி அறை, அலுமினிய பவுடர் அறை மற்றும் ஜென்ரல் ஸ்டோர் ரூம் ஆகிய 4 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு முன் வெடி விபத்து நடந்ததால் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. நேற்று பட்டாசு உற்பத்தி முடிந்து, மீதமிருந்த மணி மருந்தை இருப்பு வைத்து உள்ளனர். அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மே மாதம் 6-ம் தேதி சிவகாசி அருகே செங்கமலபட்டி - நாரணாபுரம் சாலையில் உள்ள பெரியாண்டவர் அலுமினிய பேப்பர் சீவு தூள் கம்பெனியில், சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

அதே நாளில் ஈஞ்சார் பகுதியில் உள்ள மத்தாப்பு தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட வெடி விபத்தில் ஒரு அறை சேதமடைந்தது.

கடந்த 9 ஆம் தேதி செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

விசாரணையில் ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, கூடுதல் பணியாளர்களை கொண்டு மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்தது, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான அளவு வெடி மருந்துகளை கையாண்டது, கடந்த ஓராண்டாக பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்தது, தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்தி செய்தது உள்ளிட்ட விதிமீறல்களால் விபத்து நிகழ்ந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பட்டாசு அலையின் உரிமம் 2026-ம் ஆண்டு வரை உள்ள நிலையில் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று (மே.11) காலை நடந்த விபத்தோடு சேர்ந்து கடந்த 6 நாட்களில் 4 விபத்து நடந்துள்ளது. பட்டாசு தொழிலர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிலாளர் நலத்துறை உத்தரவு: இதற்கிடையில், பட்டாசு விபத்துகள் தொடரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிமம், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பட்டாசு தொழிற்சாலைகள் உரிய உரிமம் பெற்று இயங்குகின்றனவா, தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தையும் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களில் ஒரு நல்ல கட்டமைப்புடன் கூடிய பட்டாசு தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்திவரும் நிலையில் பட்டாசு தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதாகவே உள்ளது.

ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற வரம்பு, தொழிலாளர்களின் வேலைகளை உடனிருந்து கவனித்து வழிகாட்டக்கூடிய பாதுகாப்பு குழுக்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பேசக்கூடிய சங்கங்கள் அமைப்பது போன்றவற்றை அரசு செய்யுமா என்ற கேள்விகளை இந்தத் தொடர் விபத்துகள் எழுப்புகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x