Last Updated : 24 Apr, 2018 07:38 PM

 

Published : 24 Apr 2018 07:38 PM
Last Updated : 24 Apr 2018 07:38 PM

புதுச்சேரி அரசுத் துறை பெண் ஊழியர்கள் பாலியல் புகார்; விசாரணைக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார் கால்நடைத் துறை இயக்குநர்

 

புதுச்சேரி அரசுத் துறை பெண் ஊழியர்கள் அளித்த பாலியல் புகார் அடிப்படையில் சம்மன் அனுப்பியதில் கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபன், புகார் குழுவில் இன்று ஆஜராகவில்லை. இந்நிலையில் இவ்விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவை அவர் பெற்றுள்ளதால், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

பெண்களுக்கு பணியிடங்களில் நேரிடும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரிக்க, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் உத்தரவின்பேரில், உள்ளூர் புகார்கள் குழு (local complaints committee) என்ற தனிப் பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு தலைவராக முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவர் டாக்டர் வித்யா ராம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இப்பிரிவில் 4 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதே துறைகளில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக உள்ளூர் புகார்கள் குழுவுக்கு 5க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. முதற்கட்டமாக, எழுத்துப்பூர்வமாக வந்த புகார்களை விசாரிக்க இக்குழு திட்டமிட்டது.

இந்நிலையில் இப்புகாரில் அதிகளவு புகார்கள் வந்த கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபன், புகார் குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு மேலும் அவகாசம் தரலாம் என்று இக்குழு திட்டமிட்டிருந்தது.

அதேநேரத்தில் இயக்குநர் பத்மநாபன் மீதான புகார் தொடர்பாக இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 27 பேர் வரை சாட்சியங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவரது பேச்சு அடங்கிய பாலியல் துன்புறுத்தல் ரீதியான ஆடியோ பதிவுகளும் சாட்சியங்களாக பெறப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இதுதொடர்பாக டாக்டர் வித்யா ராம்குமாரிடம் கேட்டதற்கு, "சென்னை உயர் நீதிமன்றத்தில் கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபன் தன்னை இக்குழு விசாரிப்பதற்கு தடை உத்தரவு பெற்றுள்ளார். அதனால் அரசு மூலமாக இவ்வழக்கை நடத்த இக்குழுவின் மூலம் முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x