Published : 04 May 2024 05:50 AM
Last Updated : 04 May 2024 05:50 AM

அரூர் பகுதியில் காற்றுடன் மழை - மரங்கள் முறிந்து விழுந்தன

அரூர் அருகே நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலையில் விழுந்த மரம்.

அரூர்: அரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப நிலை நிலவி வருகிறது. இதனால் நீர் நிலைகள் வறண்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவில் சரிந்து விட்டது.

கடும் வறட்சியால் மழையை எதிர்பார்த்து அனைத்து தரப்பினரும் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அரூர் உள்ளிட்ட ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் வரை பரவலாக அனைத்துப் பகுதியிலும் சுமார் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

மாலை 3 மணியளவில் வெயிலின் தாக்கம் குறைந்து மழைக்கான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து அரூர் மலைப்பகுதியில்தொடங்கிய மழை அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

திடீர் மழை மற்றும் காற்றால், கடும் வெயிலால் காய்ந்து கிடந்த மரங்கள், மரக்கிளைகள் உடைந்து விழுந்தன. சில இடங்களில் மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை மற்றும் மின்வாரிய பணியாளர்கள் மழையில் நனைந்தவாறு மரக்கிளைகளை அகற்றியும் மின் இணைப்பை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். கோடைவெயிலை விரட்டும் வகையில் சிறிது நேரம் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x