Published : 03 May 2024 04:16 AM
Last Updated : 03 May 2024 04:16 AM

திருப்பத்தூர் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சீரான குடிநீர் கேட்டு அரசுப் பேருந்தை சிறை பிடித்து காலி குடங்களுடன் பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சி பழத்தோட்டம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கோடை வெப்பம் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் வாரத்துக்கு 4 நாட்களுக்கு மட்டுமே ஊராட்சி நிர் வாகம் சார்பில் குடிநீரை வழங்கி வந்தது.

வாரத்தில் 4 நாட்களுக்கு வழங்கப்படும் குடிநீரும் அரை மணி நேரம் மட்டுமே விநியோகிப்பதால் அங்குள்ள குடியிருப்பு மக்களுக்கு அந்த குடிநீர் போதுமானதாக இல்லை. குடிநீர் வந்த உடன் காலி குடங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே ஒரு குடம் குடிநீர் கிடைக் கிறது. அனைவருக்கும் தேவை யான குடிநீரை வழங்க வேண்டும், குடிநீர் வழங்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அனைவருக்கும் குடிநீர் வழங்க நீராதாரம் இல்லை என்பதால் அரைமணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என ஊராட்சி நிர்வாகம் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பொம்மிகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சீரான குடிநீர் வழங்க வேண்டும், அனைவரின் குடிநீர் தேவையை ஊராட்சி மன்ற அதிகாரிகள் நிறைவேற்றி தர வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி அனைவருக்குமான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கையை ஓரிரு நாட்களில் எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி யளித்தனர்.

இதனையேற்ற பொதுமக்கள் ஒன்றரை மணி நேரம் கழித்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் கோடை வெப்பத்தால் குடிநீர் பற்றாக்குறை ஆங்காங்கே எழுந்து வருகிறது. இதற்கான தீர்வுகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x