Published : 29 Aug 2014 11:02 AM
Last Updated : 29 Aug 2014 11:02 AM

கோவை தொழில்துறையினருடன் ம.பி. முதல்வர் சந்திப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறு கோவை தொழில்முனைவோர்களை வியாழக்கிழமை சந்தித்து அம் மாநில முதல்வர் சிவராஜ்சிங் செளகான் அழைப்பு விடுத்தார்.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் செளகான் கோவைக்கு வியாழக்கிழமை வந்தார். கோவை தனியார் நட்சத்திர தங்கும் விடுதியில் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 33 தொழில்முனைவோர்களிடம் அவர் பேசியதாவது:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடப்பு ஆண்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். இதற்காக, வரும் அக்டோபர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி உலக தொழில்துறை சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இந் நிகழ்ச்சியில் தொழில்முனைவோர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், துபாய், சவுதிஅரேபியா ஆகியவற்றுக்குச் சென்று தொழில்துறையினரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம்.. வேறு மாநிலங்களில் இருந்து தொழில்தொடங்க வரும் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான மின்வசதி, இடம், தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆகியவற்றை உடனடியாக ஏற்பாடு செய்து தருகிறோம்.

கோவை நகரம் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்குள்ள தொழில்முனைவோர்கள் மத்தியப் பிரதேசத்தில் வந்து தொழில் செய்ய முன்வர வேண்டும். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. எங்களது மாநிலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க முடியும். சோலார், காற்றாலை மின்உற்பத்தி தொடங்க வரும் தொழில் முனைவோர்களுக்கு விலையில்லாமல் நிலம் வழங்கப்படும். தடையற்ற தண்ணீர் வசதியும் செய்து தருகிறோம்.

தொழில்துறையினர் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் தொழில் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வசதிகள் பெரு முதலீட்டாளர்களுக்கு மட்டும் இல்லாமல் சிறு,குறு முதலீட்டாளர்களுக்கும் வழங்கத் தயாராக உள்ளோம்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. அந்த சுற்றுலா தலங்களுக்கு வந்து பார்வையிட்டு செல்லுங்கள். அனைத்து வசதிகளையும் நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x