Published : 02 Aug 2014 10:00 AM
Last Updated : 02 Aug 2014 10:00 AM

பாஜகவினர் குடும்பத்தோடு பங்கேற்கும் கமலாலய தரிசனம்: நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்

பாஜகவினர் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்கும் கமலாலய தரிசனம் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

தமிழக பாஜக சார்பில் கடந்த 4 வருடங்களாக ‘கமலாலய தரிசனம்’ என்னும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கிறது. இதற்காக சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு தொண்டர்கள் தங்கள் குடும்பத்தோடு வருவார்கள். கமலாலய தரிசன நாளில் பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் அங்கு இருப் பார்கள். அவர்களை, தொண்டர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சந்தித்து உரையாடுவார்கள்.

இந்த தினத்தில் தொண்டர் களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. அதனால் அவர்கள் கமலாலயத்தின் எல்லா பகுதிக்கும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக பாஜக அலுவலக செயலாளர் சர்வோத்தமன் கூறியதாவது:

பாஜகவின் 5-ம் ஆண்டு கமலாலய தரிசன விழா சனிக்கிழமை நடக்கிறது.இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் தங்கள் குடும்பத்துடன் வரவுள்ளனர். கமலாலய தரிசனத்தின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திரையுலகப் பிரபலங்களை அழைத்துள்ளோம். ஏவிஎம் சரவணன், எம்.எஸ்.விஸ்வ நாதன், இயக்குனர் பாலச்சந்தர், சிவக்குமார், உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதாக நடிகர் ஆர்யா உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x