Published : 24 Apr 2024 04:32 AM
Last Updated : 24 Apr 2024 04:32 AM

பாக் நீரிணையை கடக்க முயன்றபோது பெங்களூருவை சேர்ந்த 77 வயது நீச்சல் வீரர் உயிரிழப்பு

பாக் நீரிணையை நீந்தி கடக்கும் நீச்சல் வீரர் | கோப்புப் படம்

ராமேசுவரம்: பாக் நீரிணைப் பகுதி தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் கடல் பகுதியாகும். சில ஆண்டுகளாக தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீச்சல் வீரர்கள் குழுவாகவோ, தனியாகவோ பாக் நீரிணையை நீந்தி கடக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஸ்விம் லைஃப்அகாடமி சார்பாக 13 நீச்சல் வீரர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 30 கி.மீ. தொலைவு பாக் நீரிணை கடல் பரப்பை நீந்திக் கடக்கத் திட்டமிட்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ராமேசுவரத்திலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் மருத்துவக் குழு, நீச்சல் பயிற்சியாளர், மீனவர்கள் உட்பட 31 பேர் கொண்ட குழுவினர், தலைமன்னார் சென்றனர்.

நேற்று அதிகாலை 12.10 மணியளவில் தலைமன்னார் கடலில் இருந்து 13 வீரர்களும் நீந்தத் தொடங்கினர். அதிகாலை 3 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் நீந்தியபோது, கோபால் ராவ் (77) என்ற முதிய வீரருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சக வீரர்கள் அவரை படகில் ஏற்றினர். மருத்துவக் குழு, பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

தொடர்ந்து, கோபால் ராவின்உடல் தனுஷ்கோடி மீன்பிடி இறங்குதளம் கொண்டு வரப்பட்டு, ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மண்டபம் மெரைன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x