Published : 20 Apr 2024 10:04 AM
Last Updated : 20 Apr 2024 10:04 AM

“47 வகை முயற்சிகள் இல்லையெனில்...” - சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: “வாக்களிப்பதில் நகர்ப்புறங்களில் மக்களிடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகமான வாக்குப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், இந்த வாக்குப்பதிவு சதவீதமும் வந்திருக்காது” என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மூன்று மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட சென்னையில், வெள்ளக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி, வட சென்னையில் 69.26%, தென் சென்னையில் 67.82% மற்றும் மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், மத்திய சென்னை தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை இன்று (ஏப்.20) பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “வாக்களிப்பதில் நகர்ப்புறங்களில் மக்களிடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அதிகமான வாக்குப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், இந்த வாக்குப்பதிவு சதவீதமும் வந்திருக்காது. வெயிலின் காரணமாக பகலுக்குப் பிறகு வாக்காளர்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, அடுக்குமாடி குடியிருப்பவர்கள் பலரும் வாக்களிக்க வருவதற்கான முயற்சிகளை எடுக்க தயங்குகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அதிகளவு வாக்குப்பதிவை மேற்கொள்ள மண்டல அளவிலான அதிகாரிகள் மூலமாகவும் நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். தொடர் விழிப்புணர்வு மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் 188 கேமராக்களின் கண்காணிப்பில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அறை முன்பு யாரும் செல்ல முடியாது. அந்தப் பகுதி மத்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும். தமிழக காவல் துறை, பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1095 பேர் மூன்று ஷிப்ட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை யாராலும் திறக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் உடன்தான் அதை திறக்க முடியும். அரசியல் கட்சியினர் சார்பில் வருபவர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பக்கத்து அறையில் இருந்து, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x