Last Updated : 13 Apr, 2018 06:26 PM

 

Published : 13 Apr 2018 06:26 PM
Last Updated : 13 Apr 2018 06:26 PM

கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக புதுச்சேரி அரசு; காவிரி விவகாரத்தில் அழுத்தம் தரவில்லை: ரங்கசாமி குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக புதுச்சேரி காங்கிரஸ் அரசு உள்ளது. அதனால்தான் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகி அழுத்தம் தரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''புதுச்சேரி வளர்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ் எப்போதும் ஈடுபடுத்திக்கொள்ளும். தேவைப்படும்போது மாநில வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் குரல் கொடுக்கும். காரைக்கால் கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் கிடைப்பது அவசியம். முதல்வராக இருந்தபோது காரைக்காலுக்கு காவிரி நீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பங்கேற்று நமக்குரிய காவிரி நீரைப் பெற அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். காவிரி நீர் கிடைக்க அனைத்து நடவடிக்கையிலும் உறுதியாக இருப்போம் என்று கூறியுள்ளோம்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாகத்தான் இங்கு ஆளும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு உள்ளது. அதனால்தான் உச்ச நீதிமன்றம் சென்று தேவையான அழுத்தத்தை தரவில்லை. பிறரை குறை கூறும் செயலைதான் புதுச்சேரி காங்கிரஸ் அரசு செய்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். இதற்காக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளேன். அதற்காக நேரம் கோரியுள்ளேன்.

பிரதமர் மோடி சென்னையில் பங்கேற்ற விழாவை புறக்கணித்தாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆனால், அவர் பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ராணுவத் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளதுபோல் புதுச்சேரிக்கு தொழிற்சாலைகள் வர முதல்வர் வலியுறுத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

குறுக்குவழியில் முதல்வராக நீங்கள் முயற்சிப்பதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டுகிறாரே என்று கேட்டதற்கு, "நான் ஒரு புதிய கட்சியை உருவாக்கி முதல்வர் ஆனவன். குறுக்கு வழியில் முதல்வராக வரவேண்டிய அவசியமில்லை. முதல்வராக இருந்த என்னை இறக்கிவிட்டுதான் முதல்வராக வந்தார்கள். நான் கொல்லைப்புறமாக முதல்வராக வரவில்லை. பல ஆண்டுகள் முதல்வர், அமைச்சர் பதவியில் இருந்துள்ளேன். கொல்லைப்புறமாக யார் முதல்வராக வந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்" என்று பதில் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x