Published : 07 Apr 2024 05:22 AM
Last Updated : 07 Apr 2024 05:22 AM

1,146 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய 1,146 கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்யும் நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய கடந்தஅதிமுக ஆட்சியில் 2020 மார்ச் 21-ல்அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்காக நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வு நடைமுறைகள் முடிக்கப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் காரணமாக இந்த நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

அறிவிப்பாணையை எதிர்த்து வழக்கு: ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த தேர்வு நடைமுறைகள் கைவிடப்பட்டன. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் 4 ஆயிரம்உதவிப் பேராசிரியர்களை நியமிக்க2022-ம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து 2020-ம் ஆண்டுஅரசாணைப்படி தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி ஏற்கெனவே தேர்வு நடைமுறைகளை முடித்த 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்தநீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘ஏற்கெனவே 1,146 பேருக்கும் நேர்முகத் தேர்வு வரை முடிக்கப்பட்டு தேர்வு நடைமுறைகள் முடிந்தபிறகு, அதை திடீரென மாற்ற முடியாது. எனவே, பாதிக்கப்பட்டுள்ள இந்த 1,146 பேருக்கும் உதவிப் பேராசிரியர்களாக பணிநிரந்தரம் செய்யும் நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்’’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x