Published : 02 Apr 2024 03:19 PM
Last Updated : 02 Apr 2024 03:19 PM

அதானி முதல் தேர்தல் பத்திரம் வரை... பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவு செயல்கள் - தமிழக காங். பட்டியல்

செல்வப்பெருந்தகை

சென்னை: “மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தார்கள். அதனால், தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூ.6,572 கோடி குவித்த பிரதமர் மோடி, ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பாஜக அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த கார்ப்பரேட் வரி 40 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதனால் பாஜக அரசின் வரி வருவாய் 2019-20-இல் 5 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக இருந்தது, கார்ப்பரேட் வரி குறைப்பிற்கு பிறகு 2020-21-இல் ரூபாய் 4 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது.

ஒரே ஆண்டில் கார்ப்பரேட் வரி 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பார்ம் நிறுவனம் 2023-இல் வெளியிட்ட அறிக்கையின்படி மக்கள் தொகையில் 10 சதவிகித கோடீஸ்வரர்கள் இந்தியாவின் சொத்து மதிப்பில் 77 சதவிகிதத்தை குவித்து வைத்துள்ளனர். அதேநேரத்தில் 50 சதவிகித மக்கள் அதாவது 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பு 1 சதவிகிதம் தான் உயர்ந்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. உலக கோட்டீஸ்வரர்கள் வரிசையில் 2014-ஆம் ஆண்டு 609 இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு?

மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தார்கள். அதனால் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூ.6,572 கோடி குவித்த பிரதமர் மோடி, ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

கடந்த 2000-ஆம் ஆண்டில் 9 ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2023-இல் 169 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் மோடி கார்ப்பரேட்டுகளின் பாதுகாவலனாக இருக்கிறார் என்பதை எவராவது மறுக்க முடியுமா? அமலாக்கத் துறையின் சோதனைக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சிக்கு 32 கார்ப்பரேட் குழுமங்கள் ரூபாய் 335 கோடி நன்கொடையாக வழங்கியதற்கு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் கான்ட்ராக்ட்கள் வழங்கி அதற்கு பிரதிபலனாக தேர்தல் பத்திர நன்கொடையை பெற்றது. பா.ஜ.க. கார்ப்பரேட்களை அச்சுறுத்தியும், சலுகைகளை வழங்கியும் நன்கொடை திரட்டியதைவிட மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும். அதேபோல, பாஜகவுக்கு 16 ஷெல் கம்பெனிகள் ரூபாய் 419 கோடி நிதி அளித்துள்ளன.

2024 தேர்தலை எதிர்கொள்ள பாஜக நன்கொடையை குவித்துக் கொண்டு அராஜக வழிமுறைகளை தேர்தல் களத்தில் பின்பற்றி வருகிறது. போதைப் பொருள் தடுப்புக்காக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு பாஜக பயன்படுத்தி வருகிறது.

இத்தகைய பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடிக்கு வருகிற மக்களவைத் தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. பாசிசம் வீழப் போகிறது. இந்தியா மீளப் போகிறது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x