Published : 25 Mar 2024 03:15 PM
Last Updated : 25 Mar 2024 03:15 PM

“தோல்வி பயத்தால் அதிமுகவினர் அராஜகம்” - அமைச்சர் சேகர்பாபு @ வட சென்னை சலசலப்பு

சென்னை: "தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தால், அதிமுகவினர் இப்படிப்பட்ட அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவார்கள். எதிரிகள் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே, தேர்தலை அமைதியாக சந்திக்க வேண்டும். எங்கும் ஒரு சிறு சலசலப்புக்கு இடமளிக்கக் கூடாது என்ற தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ற வகையில், அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாங்கள் முறையிட்டோம்" என்று வட சென்னை தொகுதி வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 25) சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் வட சென்னை தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்தனர். இதனையடுத்து யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. | விரிவாக வாசிக்க > சேகர்பாபு - ஜெயக்குமார் தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்: வட சென்னை வேட்புமனு தாக்கல் நிகழ்வில் சலசலப்பு

வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிப் பெற்றிருந்தார். வேட்புமனு தாக்கலைப் பொறுத்தவரை, அன்றைய தினத்தில்தான், மனு தாக்கல் செய்பவர்களுக்கான வரிசையை முடிவு செய்வார்கள். அந்தவகையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் இரண்டாவது நபராக திமுக வேட்பாளர் டோக்கன் பெற்றிருந்தார். அதுவும் தேர்தல் நடத்தும் அலுவலரால், எங்களுக்கு 12 மணி முதல் 12.30 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சரியாக 12.15 மணிக்கு நானும் வேட்பாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எங்களுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக சென்றோம். இன்று காலையிலேயே வேட்பாளர் கலாநிதி வீராசாமி பெயரில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தேர்தல் அலுவலகத்தின் வெளியே உள்ள காவல் துறை பதிவேட்டில் பதிவு செய்திருந்தார். அந்த வகையில், எங்களுடைய வரிசை எண் 2, அதிமுகவின் வரிசை எண் 7. ஆனால், நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே நுழைந்தபோது, அதிமுகவினரும் எங்களுடன் கும்பலமாக நுழைந்தனர்.

அவர்களுடைய வேட்பு மனுவைத்தான் முதலில் பெற வேண்டும். அவர்களுடைய வேட்பாளர் முதலில் வந்துவிட்டதாக கூறி பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிட்டனர். தமிழக முதல்வர் எங்கேயும் சட்ட விதிமீறல் இருக்கக் கூடாது என்று எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், எதிரிகள் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே தேர்தலை அமைதியாக சந்திக்க வேண்டும். எங்கும் ஒரு சிறு சலசலப்புக்கு இடமளிக்கக் கூடாது என்ற வகையில், அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாங்கள் முறையிட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால், அதிமுகவினர் அவதூறு பேச்சுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக பேசிக் கொண்டிருந்தனர். முறையாக டோக்கன் பெற்றிருந்த கலாநிதி வீராசாமியின் மாற்று வேட்பாளராக ஜெயந்தி வீராசாமி காலை 9 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய டோக்கன் பெற்றிருந்தார். இதனால், கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்தபோது, ஜெயந்தி வீராசாமியை அழைக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது. எனவே, திமுகவின் மாற்று வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த பிறகுதான் அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தால், அதிமுகவினர் இப்படிப்பட்ட அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவார்கள். எல்லாவற்றையும் சந்தித்து, களத்தில் நின்று கடுமையான போராட்டங்களை சந்தித்த இயக்கம் திமுக. ஆட்சி அதிகாரம் இல்லாத நேரத்தில்கூட திமுக கொள்கைக்காக களத்தில் நின்ற கட்சி. எப்போதும் உதயசூரியன்தான் தகதகவென ஜொலிக்கும். அந்தவகையில், இன்றைக்கும் உதயசூரியன் சின்னம்தான் முதலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறது" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அதேவேளையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது “திமுகவினர் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், முண்டியடித்துக்கொண்டு மரபைப் பின்பற்றாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர். ஆளுங்கட்சி தங்களது அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அழுத்தம் கொடுத்து அவரை பணிய வைக்கப் பார்த்தனர்” என்றார். அதை முழுமையாக வாசிக்க > “திமுகவினரின் டோக்கன் பெயரிலும் பினாமி” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் @ வட சென்னை சலசலப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x