

சென்னை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆண்டுதோறும் வாக்காளர்பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். அப்போது, அடுத்தாண்டு ஜன. 1-ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்.
இதற்கிடையில், 17 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கபதிவு செய்யலாம். ஆனால், 18 வயது நிறைவடைந்ததும் பெயர்கள் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் அடிப்படையில், காலாண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மக்களவை தேர்தலுக்கான வாக்காளர்பட்டியல் தயாரிக்கும் பணியில்தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதால், உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஜன.22-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு, கடந்த மார்ச் 17-ம்தேதிவரை பெயர் சேர்க்கலாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன்படி பலரும் தற்போதுபெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட வற்றுக்கான படிவங்களை நேரிலும், ஆன்லைன் மூலமும் வழங்கியுள்ளனர். இவற்றை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், மாநில தேர்தல்அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், மார்ச் 27-ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் என்பது கடந்த ஜன.1-ம்தேதியை தகுதியேற்கும் நாளாக கொண்டு அமைந்திருக்க வேண்டும். அதன்படி 18 வயது நிரம்பியவர்கள் கடந்த ஜன.22, மார்ச் 17-ம்தேதிக்கு இடையில் விண்ணப்பித்திருந்தால் அதில் தகுதியானவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.