Published : 18 Mar 2024 05:50 AM
Last Updated : 18 Mar 2024 05:50 AM

ஆட்குறைப்புக்கு வழிவகுக்கும் வாரியத்தின் ஆணைகளை செயல்படுத்த கூடாது: தொமுச உள்ளிட்ட 14 சங்கங்கள் கடிதம்

சென்னை: ஆட்குறைப்புக்கு வழிவகுக்கும் வாரிய ஆணைகளை செயல்படுத்த கூடாது என மின்வாரிய தொழிற்சங்ககூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொமுச உள்ளிட்ட 14 சங்கங்கள் சார்பில் மின்வாரிய தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: அண்மை காலமாக தொழிற்சங்கங்களோடு கலந்து ஆலோசிக்காமலும், கடந்த 2022-ம் ஆண்டு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாகவும், மின்சாரத் துறை அமைச்சர் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாகவும் மின்வாரிய நிர்வாகம் பல்வேறு ஆணைகள் மூலமாக பணியாளர்களின் பதவி எண்ணிக்கைகளை தொடர்ந்து குறைத்து வருகிறது.

துணை மின் நிலையங்களில் பதவிகளை குறைப்பது தொடர்பாக கடந்த 5-ம் தேதி மின்வாரியம் ஆணை பிறப்பித்துள்ளது. வேலைப்பளு மற்றும் பணியாளர் எண்ணிக்கை தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் உடன்பாடு கண்டு ஒப்பந்தம் செய்து கொள்ளும் வரை ஏற்கெனவே உள்ள பணியிடங்கள் தொடர்ந்து இருக்கும் என 2018 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிராக உள்ளது

மின்வாரியத்தின் இத்தகைய அலட்சிய போக்கு மின்சாரத் துறையின் தொழில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். பணியாளர்களை போராட்டத்துக்கு தள்ளிவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழில் நிலைகளில் தேவைப்படும் மாற்றங்களை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமல்படுத்த வேண்டும். இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தும் வரை கடந்த 5-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணை உள்ளிட்ட ஆட்குறைப்பு வாரிய ஆணைகளை செயல்படுத்தாமல் தள்ளிவைக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x