Published : 13 Mar 2024 11:08 AM
Last Updated : 13 Mar 2024 11:08 AM

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு: தமிழக அரசு

சென்னை: நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்றும் தமிழக அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, போரின் போது காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர்களின் மனைவிகள், மாற்றுத்திறனாளி முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சொத்து வரி திருப்பிச் செலுத்தப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சொத்துவரி திருப்பிச் செலுத்தும் திட்டம் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், இந்த அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் பட்ஜெட் குறிப்பில் அறிவித்தார்.

இந்த பட்ஜெட் அறிவிப்பன்படி தற்போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பொதுத் துறை செயலாளர் அரசாணையை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x