Published : 07 Mar 2024 06:01 AM
Last Updated : 07 Mar 2024 06:01 AM

தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் சேவை: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஒப்பந்தம்

சென்னை: சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக, முக்கிய இணைப்புப் பகுதியாக இருக்கும் வேளச்சேரி - தாம்பரம் இடையே மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் லைட் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த, கடந்த 2019-ம் ஆண்டு முடிவு செய்து, சாத்தியக்கூறு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. ஆனால், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயக்கம் காட்டியது.

இந்நிலையில், தாம்பரம் – வேளச்சேரி, வேளச்சேரி – கிண்டி இடையேமெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து மீண்டும் சாத்தியக்கூறு ஆய்வு நடத்த சிஸ்ட்ரா எம்.வி.ஏ. கன்சல்டிங் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: கூடுதல் வழித்தடங்களை இணைக்கும் போதுதான், பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

இந்த நோக்கத்திலேயே புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தாம்பரம் - வேளச்சேரி, வேளச்சேரி - கிண்டி இடையே மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, அங்குள்ள பிரதான சாலையை ஒட்டியே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

அடுத்த 3 மாதங்களில் இந்தப் பணி முடிந்தவுடன், இந்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழகஅரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமேவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x