Published : 06 Mar 2024 06:10 PM
Last Updated : 06 Mar 2024 06:10 PM

“நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?” - விமர்சித்த இபிஎஸ்ஸுக்கு டி.ஆர்.பி.ராஜா பட்டியல்

சென்னை: 'நீங்கள் நலமா' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அவருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ என்கிற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்க நாளான இன்று ‘நீங்கள் நலமா’ திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில், திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "நீங்கள் நலமா என்று கேட்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!.

சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!. விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!. எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!. நாங்க நலமா இல்லை ஸ்டாலின்" என்று பதிவிட்டு இருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "எதிர்கட்சித் தலைவர், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார். விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. பதவியைக் காப்பாற்றுவதற்காக பாஜகவுடன் சேர்ந்து தமிழகத்துக்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? கரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?.

கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழக மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள்" என்று பதில் கொடுத்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x