Published : 25 Aug 2014 12:00 AM
Last Updated : 25 Aug 2014 12:00 AM
ஆவடி பட்டாபிராமில் கிடப்பில் கிடந்த எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, ‘தி இந்து’-வில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து மீண்டும் தொடங்கியது. இன்னும் 3 மாதத்தில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில் உள்ளது காந்திநகர் மயானம். நகராட்சிக்கு சொந்தமான இந்த மயானத்தில் கடந்த ஆண்டு இறுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அப்பணி தொடங்கிய ஒரு மாதத்திலேயே கிடப்பில் போடப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்த செய்தி ‘எரிவாயு தகன மேடை பணிகள் மீண்டும் உயிர்பெறுமா?’ என்ற தலைப்பில் கடந்த 18-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் வெளிவந்தது. பட்டாபிராமிலும் ஆவடி பெரியார் நகரிலும் ஒரே நேரத்தில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணியை எடுத்த ஒப்பந்ததாரர், முதலில் பெரியார் நகர் தகன மேடையை பணியில் ஈடுபட்டதால் இப்பணியை கிடப்பில் போட்டதாகவும் விரைவில் பணி தொடங்கும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கிடப்பில் கிடந்த எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக கட்டுமானப் பணியும் இரண்டாம் கட்டப்பணியான இயந்திரங்கள் பொருத்தும் பணியும் இன்னும் மூன்று மாதங்களில் நிறைவடைந்து தகன மேடை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT